புது தில்லி: தில்லியில் நவம்பர் 7-ஆம் தேதிக்குப் பிறகு பொது இடங்களிலோ, மதுக்கடைகள் அருகிலோ நின்று மது அருந்துபவர்களுக்கு அபராதமும், பொது மக்களுக்கு தொந்தரவு அளிப்பவர்களுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று தில்லி அரசு எச்சரித்துள்ளது.
தலைநகரில் பொது இடங்களில் மது அருந்துவதை கட்டுப்படுத்து குறித்த தில்லி அரசின் செயல்திட்டம் தொடர்பாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியதாவது:
தில்லியில், வரும் நவம்பர் 7-ஆம் தேதிக்குப் பிறகு பொது இடங்களிலோ, மதுக் கடைகளுக்கு அருகிலோ நின்று மது அருந்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். மது அருந்திவிட்டு பொது மக்களுக்கு தொந்தரவு தருவோருக்கு 3 மாத சிறைத் தண்டனையுடன் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
அதற்கு முன்பாக, பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு பிரசாரம் நவம்பர் 7-ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்படும். அந்த காலகட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு எத்தகைய அளவில் உள்ளது என்று கண்காணிக்கப்படும்.
விழிப்புணர்வுப் பிரசாரம், விதிகளை மீறும் மதுக் கடைகளுக்கு எதிராக நடவடிக்கை, பொது இடங்களில் மது அருந்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை என 3 அடுக்குகளாக இதனை செயல்படுத்த உள்ளோம்.
விழிப்புணர்வுப் பிரசாரத்தின்போது, மதுக் கடைகளிலும் அவை சார்ந்த இதர கடைகளிலும் (தின்பண்டங்கள், பிளாஸ்டிக் கிளாஸ்கள் விற்பவை) ஆய்வு செய்யுமாறு கலால் வரித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மயூர் விஹார் ஃபேஸ்-2 பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் அளித்த புகாரின் பேரில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு கலால் வரித் துறையினருடன் சேர்ந்து அங்குள்ள மதுக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது, பலர் பொது இடத்தில் நின்று மது அருந்துவது தெரிந்தது.
இதனிடையே, மதுக் கடைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுவதையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மணீஷ் சிசோடியா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.