பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக பதவி வகித்த போது, சஹாரா, பிர்லா ஆகிய நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கியதாக காங்கிரஸ் துணைத தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதனை பாஜக மறுத்துள்ளது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் மேசனா நகரில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:
கடந்த 2014-ஆம் ஆண்டில் சஹாரா, பிர்லா ஆகிய நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கண்டறியப்பட்டன.
கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2014-ஆம் பிப்ரவரி மாதம் வரை அப்போதைய குஜராத் முதல்வர் மோடிக்கு 9 தவணைகளில் ரூ.40 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக சஹாரா நிறுவன அதிகாரிகள் தெரிவித்த தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் வருமான வரித் துறையிடம் உள்ளன.
இதேபோல, பிர்லா நிறுவனத்திடம் ரூ.12 கோடி அளவுக்கு அவர் லஞ்சம் பெற்றதற்கான ஆவணங்களும் வருமான வரித் துறையிடம் உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.
இதுகுறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். சஹாரா, பிர்லா நிறுவன அதிகாரிகள், உங்களுக்கு (மோடி) லஞ்சம் கொடுத்தார்களா? இல்லையா? என்பதை அறிய விரும்புகிறோம். ஒட்டுமொத்த மக்களின் சார்பில் இக்கேள்வியை நான் எழுப்புகிறேன்.
நாட்டுமக்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை சந்தேகிக்கும் நீங்கள், இந்த கேள்விக்கு பதில் கூற வேண்டும் என்றார் ராகுல். முன்னதாக, பிரதமர் மோடியின் தனிப்பட்ட ஊழல் குறித்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக ராகுல் காந்தி கடந்த வாரம் குற்றம்சாட்டியிருந்தார்.
பிரதமர் மோடிக்கு எதிரான லஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக "காமன் காஸ்' என்ற தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பொது நல மனு, எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று கூறி கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.