மணப்பாடு கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்து திருநெல்வேலியில் சிகிச்சை பெறும் 4 பேருக்கு திங்கள்கிழமை தலா ரூ. 50 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்பட்டது.
திருச்செந்தூர் அருகே மணப்பாடு கடலில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் 10 பேர் இறந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்த கவிதா, திலிபன் ஆகியோர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையிலும், ரஞ்சனி (18), சிவகார்த்திகா (17) ஆகியோர் திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில தீவிர சிகிச்சை பிரிவிலும் சேர்க்கப்பட்டனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை சந்தித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ ஆறுதல் கூறினார். அவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.
அப்போது அமைச்சர் கூறியது: திருச்செந்தூர் அருகே மணப்பாடு கடலில் எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில் 10 பேர் இறந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
துரித நடவடிக்கையின் மூலம் மாவட்ட நிர்வாகம் மீட்பு பணியினை மேற்கொள்ளப் பட்டது.
முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து இறந்த 10 பேர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்த 10 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் உதவித் தொகை வழங்கப்பட்டது.
இதுபோன்ற விபத்துக்கள் நிகழாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தூத்துக்குடி எஸ்.பி. கூறியது: மணப்பாடு படகு விபத்து குறித்து படகின் உரிமையாளர், படகை இயக்கியவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்களை கைது செய்யப்படுவர் என்றார் அவர்.
அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர்கள் மு. கருணாகரன் (திருநெல்வேலி), ம. ரவிக்குமார் (தூத்துக்குடி), தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாப்புலர் வி. முத்தையா ஆகியோர் பங்கேற்றனர்.
இதேபோல், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவருக்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன், தலா ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.