சென்னை: ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் மாதம் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தொகுதியில் அதிமுக சசிகலா அணி சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பன்னீர்செல்வம் அணி சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை சார்பில் தீபா, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லோகநாதன், நாம் தமிழர் சாட்சி சார்பாக கலைக்கோட்டுதயம், பாஜக சார்பாக கங்கை அமரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சசிகலாவின் எதிர்ப்பாளர்கள் பலர் தீவாவுக்கு திரளான ஆதரவை வழங்கி வந்தனர். இதனால் ஜெயலலிதா பிறந்த நாளில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற பெயரில் தனி அமைப்பை தொடங்கிய தீபா, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் படகு சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்த கையோடு பிரச்சாரத்தையும் தொடங்கினார்.
பல்முனை போட்டி ஏற்பட்டுள்ள இடைத்தேர்தலில் தீபா வெற்றி பெறுவாரா என்ற கேள்வி ஒருபக்கம் இருக்கையில் அவரது பிரசாரத்தில் அவருக்கு ஆதரவு பெருகும் என்று எதிர்பார்த்தால் அதுவே அவருக்கு எதிராக போய்விடுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏன் என்றால் சொன்ன நேரத்தில் வராமல் போலீஸ் பாதுகாப்புடன் 2 மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு வந்தார். உடனே தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் திறந்த வாகனத்தில் ஏறி நின்று பிரச்சாரத்தை தொடங்கினார்.
அதுமட்டுமல்லாமல் பிரச்சாரத்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே வெயிலை பொறுக்க முடியாமல் பின்னால் வந்து கொண்டிருந்த தனது ஏசி காருக்குள் சென்று தீபா அமர்ந்து கொண்டார். காரின் கதவுகளின் கண்ணாடிகளையும் மூடியபடி தீபா உள்ளே அமர்ந்திருக்க அவருக்காக அவரது ஆதரவாளர்கள் வாக்கு சேகரித்தனர்.
தீபாவின் செயலுக்கு அங்கிருந்த பொதுமக்களும் தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்து வெளியில் வந்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனையடுத்து காரில் இருந்து இறங்கிய தீபா, நேரு நகர் பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.