புதுதில்லி: 'அல்லாவுக்குப் பிறகு நீங்கள் தான், எங்கள் கடைசி நம்பிக்கை' என, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுவன் டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளான்.
பாகிஸ்தானில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், இந்தியாவில் சிகிச்சை பெறுவதையே, பாகிஸ்தானியர்கள் விரும்புகின்றனர். அவ்வாறு, இந்தியாவில் சிகிச்சை பெற விரும்பும் பாகிஸ்தானியர்களுக்கு, 'விசா' பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலையிட்டு தீர்த்து சுமூகமாக தீர்த்துவைத்து வருகிறார்.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுவன், ஷாஸாயிப் இக்பால், டுவிட்டரில் கூறியுள்ளதாவது: அல்லாவுக்கு பின், எங்கள் கடைசி நம்பிக்கையாக, இந்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜைத்தான் கருதுகிறோம். என் உறவினர் ஒருவர் கல்லீரல் மாற்று சிகிச்சைக்காக இந்தியாவில் சிகிச்சை பெற, விசா வழங்கும்படி, இஸ்லாமாபாதில் உள்ள இந்திய துாதரகத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் சிறுவன் பதிவிட்டிருந்தான்.
இதற்கு, சுஷ்மா சுவராஜ் உடனடியாக, டுவிட்டரில் பதில் அளித்தார். அதில், உங்கள் நம்பிக்கையை, ஒருபோதும் இந்தியா பொய்யாக்காது. உங்களுக்கு, உடனடியாக மருத்துவ விசா அளிக்கப்படும் என சுஷ்மா கூறியிருந்தார்.
நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் கிஷ்வர் சுல்தானாவுக்கு மருத்துவ விசாவுக்கான உத்தரவாதம் அளித்தார்.
ஆகஸ்ட் 15 முதல் மருத்துவ சிகிச்சைக்காக பாக்கிஸ்தானியர்களுக்கு விசா மறுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.