துருக்கிய மருத்துவமனையில் ஒரே நாளில் ஒரே நேரத்தில், தாயும் அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய துருக்கியின், கோனியாவைச் சேர்ந்தவர் பாத்திமா பிரின்சி (42), அவரது மகள் காதா பிரின்சி (21). இவர்கள் இருவரும் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இருவருக்கும் ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஒரே நொடியில் ஆளுக்கொரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதுபோன்ற அபூர்வ நிகழ்வு நடைபெற்றது உலகிலேயே இதுதான் முதன்முறை என்ற மருத்துவர்கள், மருத்துவத் துறையில் இது ஒரு 'அதிசயம்' என்று தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு துருக்கியின் குடியரசுத் தலைவர் ரஜப் தையிப் அர்துகான், தாயின் பிள்ளைக்கு ரஜப் என்றும், மகளின் குழந்தைக்கு தையிப் என்றும் பெயர் சூட்டியுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாத்திமா பிரின்சியும், அவரது மகள் காதா பிரின்சியும் சிரியாவை விட்டு வெளியேறி துருக்கியில் அடைக்கலம் புகுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.