தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

இந்நிலையில், இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். நிலைத்து நின்று ஆடுவதற்கு வாய்ப்பின்றி அந்த அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. 32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களுக்குச் சுருண்டது. 

அதிகபட்சமாக டுமினி, சோண்டோ ஆகியோர் தலா 25 ரன்கள் எடுத்தனர். ஆம்லா 23 ரன்களும், டிகாக் 20 ரன்களும் சேர்த்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். தென்னாப்பிரிக்க அணியில் எந்த பேட்ஸ்மேனும் 30 ரன்களை கடக்கவில்லை.

இந்திய தரப்பில் அற்புதமாக பந்துவீசிய சாஹல் 8.2 ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஒருநாள் போட்டிகளில் சாஹல், 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.

குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பின்னர் இணைந்த ஷிகர் தவான், கேப்டன் கோஹ்லி ஜோடி 'சூப்பராக' விளையாடிய வீரர்கள், 50 ஓவர் போட்டியை இந்திய வீரர்கள் 20.3 ஓவர்களிலேயே முடிவுக்கு கொண்டு வந்தனர். 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. 

ஷிகர் தவன் 51 ரன்களும், விராட் கோலி 46 ரன்களும் விளாசினர்.

2 வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததால் ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஆறுதலாக தற்போதைய வெற்றி உள்ளது. மூன்றாவது போட்டி வரும் 7-ஆம் தேதி கேப்டவுனில் நடக்கிறது.

ஆட்டநாயகன் விருதை சூழலில் அசத்திய சகால் தட்டி சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com