

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் கைரானா மக்களவை தொகுதி பாஜக உறுப்பினர் ஹகும் சிங் (79) உடல்நலக்குறைவால் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார்.
1938-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் கைரானாவில் பிறந்த ஹகும் சிங், 1974-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் முதன்முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1983-85 ஆண்டுகளில் சட்டப்பேரவை துணை சபாநாயகராக பணியாற்றியுள்ளார். 1996-ஆம் ஆண்டு பாஜகவுக்கு தாவிய இவர் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2014 தேர்தலில் மக்களவைக்கு நுழைவதற்கு முன்பு மாநிலத்தில் ஏழு முறை சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அமைச்சராகவும் இருந்துள்ளார் .
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் கைரானா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஹகும் சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்தி மோடி, உத்தரபிரதேசத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹகும் சிங், உ.பி. மக்களுக்காவும், விவசாயிகளுக்காகவும் உற்சாக பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், ஹகும் சிங்கின் மறைவு கட்சிக்கு இடு செய்ய முடியாத இழப்பு என தெரிவித்துள்ளார். ஹகும் சிங்கின் மறைவுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் விஜய் கோயல், எம்..பி.க்கள், முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஹகும் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை திங்கள்கிழமை மக்களவை ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.