நொய்டா: தென்கொரியாவுக்கும், உத்தரபிரதேச மாநிலத்துக்கும் இடையேயான உறவு 2 ஆயிரம் ஆண்டு கால பந்தம் கொண்டது என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய செல்லிடப்பேசி தயாரிப்பு தொழிற்சாலையை தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் செல்லிடப்பேசி நிறுவனம், தில்லியை அடுத்த நொய்டாவில் அமைத்துள்ளது. இந்த தொழிற்சாலையில், ஆண்டுக்கு 12 கோடி செல்லிடப்பேசிகளை தயாரிக்க முடியும். இந்த தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி, தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோர், நேற்று திங்கள்கிழமை மாலை திறந்து வைத்தனர்.
இந்த ஆலையின் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, தில்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியும், தென் கொரிய அதிபரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து நொய்டாவை சென்றடைந்தனர்.
நிகழ்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், அயோத்யாவின் இளவரசி, கொரிய இளவரசரை திருமணம் செய்துகொண்டதாகவும், அதன்மூலம் தென்கொரியாவுக்கும், உத்தரபிரதேசத்திற்கும் இடையே 2 ஆயிரம் ஆண்டு கால உணர்வுபூர்வமான பந்தம் இருப்பதாக யோகி தெரிவித்தார்.
மேலும் நொய்டாவில் தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை வாயிலாக மட்டும் 35 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவித்தார்.
இரு நாடுகளின் வலிமையும் ஒன்றையொன்று மேலும் வலுப்படுத்துவதாகவும், இரு நாடுகளுக்கிடையே வலுவான வர்த்தக மற்றும் கலாச்சார உறவு இருப்பதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.