புதுதில்லி: விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை ‘தீவிரவாத மதக்குழுக்கள்’ என்று உலகின் சக்திவாய்ந்த அமைப்பாக கருதப்படும் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ வகைப்படுத்தி உள்ளது.
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ சமீபத்தில் வெளியிட்டுள்ள "உலக உண்மை" என்ற புத்தகம் ஒன்றில், இந்து அமைப்புகளான விசுவ இந்து பரிஷத்(விஎச்பி), பஜ்ரங் தளம் ஆகியவை தீவிரவாத மதக்குழுக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன
இதுகுறித்து அதன் மூத்த தலைவர் சுரேந்திர ஜெயின் கூறுகையில், விசுவ இந்து பரிஷத், நாட்டு நலனுக்காக செயல்பட்டு வரும் ஒரு தேசியவாத அமைப்பு. எனவே, சிஐஏ-வின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது, பொய்யானது. சிஐஏ மன்னிப்பு கேட்டு தனது தவறை சரிசெய்ய வேண்டும் என்றார்.
மேலும், நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிராகவே சிஐஏ செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும், போலியான தகவலை வெளியிட்ட சிஐஏ அமைப்பின் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை வலியுறுத்த வேண்டும். ஒசாமா பின்லேடனை உருவாக்கிய சிஐஏவுக்கு, தீவிரவாதம் பற்றி உபதேசம் செய்ய தார்மீக உரிமை இல்லை என்று சுரேந்திர ஜெயின் கூறியுள்ளார்.