ரூ.2,500 கோடி மேல் வரி ஏய்ப்பு: சிடிஎஸ் நிறுவன வங்கிக் கணக்குகள் முடக்கம்!
சென்னை: ரூ.2,500 கோடி மேல் வரி ஏய்ப்பு செய்ததாக காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (சிடிஎஸ்) நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு காக்னிசன்ட் (சிடிஎஸ்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகள் தொடங்கி தொழில் செய்து வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சிடிஎஸ் நிறுவனம் 2016-17-ஆம் நிதியாண்டிற்கான வருமானத்தை குறைவாகக் காட்டி, ரூ.2,500 கோடி மேல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சிடிஸ் நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது. வரி ஏய்ப்பு குறித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.
வருமான வரித்துறையின் நோட்டீஸ்க்கு முறையான விளக்கம் அளிக்கப்படாததால் காக்னிசன்ட் நிறுவனத்தின் சென்னை மற்றும் மும்பை நகங்களில் உள்ள கிளைகளின் வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளது.
இதுகுறித்து சிடிஎஸ் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், எல்லா வரியையும் முறையாக கட்டியுள்ளோம். வருமான வரித்துறை சட்டத்தை மீறிச் செயல்படுகிறது. வருமான வரித்துறையின் நடவடிக்கைகளால் எங்கள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழில் நிறுவனங்களிடையே பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே வழக்கு விசாரணை முடியும் வரை நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சிடிஎஸ் நிறுவனத்தில் இந்தியாவில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.