உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: தலைநகர் தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை எதிரொலியாக தலைநகர் தில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: தலைநகர் தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு


புதுதில்லி: உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை எதிரொலியாக தலைநகர் தில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து, அதனை சா்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. மேலும், இந்தியாவுடனான வா்த்தக மற்றும் தூதரக உறவுகளை முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்தது. காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. ஆனால், இந்தப் பிரச்னையில் பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் சா்வதேச ஆதரவு கிடைக்கவில்லை. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் முயலுவதாக உளவுத் தகவல்கள் கிடைத்தன.

காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் தூண்டும் பாகிஸ்தானின் பல்வேறு முயற்சிகளையும் இந்தியத் தரப்பு முறியடித்து வருகிறது. காஷ்மீரை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையிலும், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல்களை முறியடிக்க கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் சிலா் கடத்தி வந்த ஏராளமான வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் குறித்த இந்தியாவின் கருத்தை அமெரிக்காவும் அமோதித்துள்ளது.

இதனிடையே, பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 முதல் 4 பயங்கரவாதிகள் தலைநகர் தில்லிக்குள் ஊடுருவி உள்ளதாகவும், அவர்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

உளவுத்துறையினரின் எச்சரிக்கையை தொடர்ந்து, தலைநகர் தில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் சிறப்பு பிரிவு போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

நகரின் முக்கிய இடங்கள் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், போலீஸார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதுடன், தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

சோதனைச் சாவடியில் வழக்கத்தைவிட அதிக போலீஸார் குவிக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com