பி.கே.மிஸ்ரா மற்றும் பி.கே.சின்ஹா ஆகியோர் முறையே பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராகவும், முதன்மை ஆலோசகராகவும் நியமிக்கப்பட்ட சில நாட்களில், பிரதமர் அலுவலகம் இரு அதிகாரிகளுக்கான பணிப் பகுதிகளையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்குமான பணிகளையும் வரையறுத்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு பணி அதிகாரியாக பணியாற்றி வந்த பி.கே. சின்ஹா பிரதமரின் முதன்மை ஆலோசகராகவும், பிரதமரின் கூடுதல் முதன்மை செயலராக பணியாற்றி வந்த பிரமோத் குமார் மிஸ்ராவை, பிரதமரின் தனிச் செயலாளராக நியமித்து கடந்த புதன்கிழமை மத்திய அரசு உத்தரவு வெளியிட்டது.
இந்நிலையில், அவர்களுக்கான பணிகள் பிரதமர் அலுவலகத்தால் வரையறுத்து வழங்கப்பட்டுள்ளன.
அதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு, தேசிய பாதுகாப்பு பணிகள், வெளியறவுத்துறை அமைச்சகம், வெளிநாட்டு இந்திய விவகாரங்கள், பாதுகாப்பு, விண்வெளி, அணு ஆற்றல், நாட்டின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பணிகள், தேசிய பாதுகாப்பு செயலகம், தேசிய இரசாயன ஆயுதங்கள் துறை, நாகாலாந்து தேசிய சோசியலிச அமைப்புடனான பேச்சு வார்த்தைகள் ஆகியவற்றை கண்காணிக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதமரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பி.கே மிஸ்ராவுக்கு, கொள்கைகளில் ஏற்படும் சிக்கல்களையும், அமைச்சரவையின் நியமனக் குழு விவகாரங்கள் மற்றும் அனைத்து நியமன வேலைகள், செயலக அலுவலகத்தின் பணிகள், அமைச்சரவைக் கூட்டத்திற்கு தேவையான விவரங்கள், ஊழல் எதிர்ப்பு பிரிவின் நடவடிக்கைகள், ஏனைய முக்கிய பிரச்னைகள் என அனைத்தையும் கண்காணிக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதமரின் முதன்மை ஆலோசகரான பி.கே சின்ஹாவிற்கு, அனைத்து அமைச்சகம் மற்றும் துறைகளின் விவகாரங்கள் (பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் தனிச்செயலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் அல்லாத) கண்காணிக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பி.கே மிஸ்ரா, பிரதமரின் கூடுதல் தனிச்செயலாலராகவும், பி.கே சின்ஹா அமைச்சரவை செயலாளராகவும் சிறப்பாக பணியாற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.