நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது தொடர்பான விசாரணைக்காக, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில்
நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது தொடர்பான விசாரணைக்காக, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் வெங்கடேசன் மகன் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றிருப்பதாக அந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் வந்தது.

அதன் அடிப்படையில் கல்லூரிப் பேராசிரியர்கள், உதித் சூர்யாவிடம் விசாரணை செய்தனர். இதில் உதித் சூர்யா, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், அவர் திடீரென தலைமறைவானார்.

இதையடுத்து உதித் சூர்யா, நீட் தேர்வு கூட நுழைவுச் சீட்டை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர்.  அப்போது, அதில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்துக்கும், உதித் சூர்யாவுக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் தேனி மாவட்ட காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் உதித் சூர்யா மீதும், அவருக்கு தேர்வு எழுதிய நபர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், உதித் சூர்யா ஏற்கெனவே இரு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்ததால், மூன்றாவது முறையும் தோல்வியடைந்துவிட்டால் மருத்துவம் படிக்க முடியாது என்பதால், உதித் சூர்யா  ஏற்கெனவே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு நபரை ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்திருப்பதும், முறைகேட்டில் சிக்காமல் இருப்பதற்கு மும்பையில் தேர்வு எழுதியிருப்பதும் தெரியவந்தது.

இவ் வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி கடந்த 23-ஆம் தேதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து  தேனி மாவட்ட போலீஸார், சிபிசிஐடி அதிகாரிகளிடம் வழக்குக்குரிய ஆவணங்களை ஒப்படைத்தனர். மேலும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

தலைமறைவாக இருந்து வந்த உதித் சூர்யாவை தனிப்படையினர் திருப்பதியில் நேற்று புதன்கிழமை பிடித்தனர். பின்னர் அங்கிருந்து ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின்னர் உதித் சூர்யாவையும், அவர் பெற்றோரையும் தேனி மாவட்டத்துக்கு அழைத்துச் சென்று வந்துள்ளனர். 

இந்நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது தொடர்பான விசாரணைக்காக, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com