சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22 மற்றும் 23 தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஆணையத்தின் 14-ஆவது கட்ட விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போராட்டக் குழுவினரிடம் விசாரணை நடத்த ஆணையத்தின் முன் ஆஜராக வேண்டும் என 6 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும், இருவர் மட்டுமே நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறும் விசாரணையின்போது மொத்தம் 28 பேரிடம் நேரடியாக விசாரணை மேற்கொள்ள அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் கடந்த 22 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, ஆணையத்தின் விசாரணை காலத்தை மேலும் 6 மாதத்திற்கு, அதாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. ன
மூன்றாவது முறையாக விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.