குஜராத்: சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சூரத் நகரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூரத் நகர் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தின் இரண்டாவது தளத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பயிற்சி மையத்தில் இருந்த மாணவர்கள் தீயில் இருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்த கீழே குதித்துள்ளனர். இதில், மாணவர்கள் உள்பட 17 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 18 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கும், தீ விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக போராடி வருகின்றனர்.
மீட்புப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாததால் பாதிப்புகள் குறித்த முழு விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என சூரத் காவல் ஆணையர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதலும் வருத்தமும் தெரிவித்துள்ளார். குஜராத்திற்கு தேவையான உதவிகள் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கல் மற்றும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
தீ விபத்து சம்பவம் மிகவும் வருத்தமாக உள்ளது. உயிரிழந்துள்ள குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பாக ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு விரைவில் குணமடைவதற்கு தேவையான சிகிச்சைகளை விரைந்து அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.