பரமக்குடி: பிரதமர் மோடியின் 100 நாள் சாதனையாக இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சீர்குலைவு மற்றும் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக குறைந்துள்ளதையே சாதனையாக கூறவேணே்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், சட்டப்பேரைவ எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், இம்மானுவேல் சேகரன் அவர்களின் 62வது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை கண்ட இம்மானுவேல் சேகரன் அவர்களுடைய 62வது நினைவு நாள் இன்று. அவருடைய நினைவு நாளில் அவரின் நினைவிடத்தில் திமுக சார்பில் என்னுடைய அஞ்சலியை நான் செலுத்தியிருக்கிறேன்.
‘தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்’ என போராடியவர் இம்மானுவேல் சேகரன் அவர்கள். 1950 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம் என்ற இயக்கத்தை கண்ட அவர், இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தவர். 1954-ல் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்தி, தீண்டாமைக்கு எதிராக வாதிட்டு போரிட்டவர்.
எனவே, அவருடைய புகழ் ஓங்கி நிலைத்திட வேண்டும் என்கிற உணர்வோடு திமுக சார்பில் எங்களுடைய அஞ்சலியை செலுத்தியிருக்கிறோம்.
இம்மானுவேல் அவர்களின் நினைவு நாள், அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போது அரசு விழாவாக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அரசுப் பொறுப்பில் இருக்கக்கூடியவர்களிடத்தில் கேட்க வேண்டிய கேள்வி என்றவர், திமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையையே, நீங்கள் கேட்கின்ற கேள்வி இருந்து எடுத்துக்காட்டுகிறது. அதற்காக மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
மேலும், பிரதமர் மோடி அவர்களின் 100 நாள் சாதனையாக எதை குறிப்பிடுவீர்கள்? என்ற கேள்விக்கு, இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சீர்குலைவு மற்றும் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக குறைந்துள்ளதையே மோடி அரசின் மிகப்பெரிய சாதனையாக கூற வேண்டும் என்று கூறினார்.