ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை மீனவ கிராமத்தில் படகில் கடத்திவரப்பட்ட ரூ.2.45 கோடி மதிப்பிலான 7.5 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக தூத்துக்குடியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மதுரை நோக்கி சென்ற காரை மண்டபம் அருகே இன்று வழிமறித்த அதிகாரிகள் காரில் சோதனையிட்ட போது அதில் இலங்கையிலிருந்து படகில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.45 கோடி மதிப்பிலான 7.5 கிலோ தங்கம் பதுக்கி வைத்திருந்து தெரியவந்தது.
இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இலங்கையில் இருந்து படகு மூலம் ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கடல் பகுதிக்கு தங்கத்தை கடத்தி வந்து, கார் மூலம் மதுரைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.
காரில் இருந்த மதுரை கே.கே. நகா், சென்னை, புதுப்பேட்டை பகுதிகளைச் சோ்ந்தவா்கள், வேதாளையை சோ்ந்த ஒருவா் உள்ளிட்ட 7 பேரிடம் அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.