சென்னை: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று மூன்றாவது நிலைக்கு செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தற்போது வரை 2 ஆம் நிலையில் உள்ளது என தமிழக முதல்வர் பழனிசாமி கூறினார்.
கரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்காக தமிழக அரசின் சாா்பில் அமைக்கப்பட்ட 12-க்கும் மேற்பட்ட குழுக்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் கரோனா ஒருங்கிணைப்புக்குழு சிறப்பாக பணியாற்றி வருகிறது. கரோனா சிகிச்சைக்கு 137 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 4 லட்சம் ரேபிட் பரிசோதனை கருவிகள் வாங்கப்பட உள்ளது. அதில் 50 ஆயிரம் கருவிகள் இன்றைக்குள் வந்துவிடும். 3,370 செயற்கை சுவாச கருவிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் 96.30 சதவீதம் பேருக்கு நிவாரண தொகை ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதவித்தொகை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். நலவாரிய தொழிலாளர்களுக்கும் தலா ரூ.1000 வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் தான் அரசு ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு மூன்றாம் நிலைக்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், தற்போதுவரை 2 ஆம் நிலையில்தான் உள்ளது.
சென்னையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும். தகுதிகள் அடிப்படையில் அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என கூறினார்.
கரோனா தடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம். பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை வழங்கலாம். அதனை கரோனா தடுப்புப் பணிகளுக்கு அரசு பயன்படுத்திக்கொள்ளும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத வேண்டியது அவசியமானது. தேர்வை ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை. தேர்வை எப்போது நடத்துவது என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறினார்.