ஈரோடு: கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 33 நபர்களின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டி: ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 4 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மற்றவர்கள் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 33 நபர்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே தற்போது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பரிசோதனை செய்யப்படும் இயந்திரம் பழையது. விரைவில் புதிய இயந்திரம் வந்துவிடும். இது தவிர ரேபிட் கிட்டுகள் வர உள்ளது. மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 33,000 குடும்பங்களை சேர்ந்த 1.66 லட்சம் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.