செய்யாறு: செய்யாறு அருகே இரண்டாம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மறுத்த மனைவியை கொல்ல முயன்ற அரசு ஊழியர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
செய்யாறு வட்டம் கீழ்மட்டை கிராம காலனியை சேர்ந்தவர் தேசிங்கு(36). இவர் வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் ஜீப் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று 11, 9,7 ஆகிய வயதில் 3 மகன்கள் உள்ளனர்.
கணவர் தேசிங்கு அதேப் பகுதியைச் சேர்ந்த வேறோரு இனத்தைச் சேர்ந்த பெண்ணை 2 -ம் திருமணம் செய்து கொள்வதற்காக மனைவி தனலட்சுமிடம் சம்மதம் கேட்டதாகத் தெரிகிறது. அதற்கு தனலட்சுமி எதிர்ப்புத் தெரிவிக்கவே அவரது தாய் வீட்டிற்கு சென்றிட வேண்டும் என்றும், சில நாட்களாக கணவர் தேசிங்கு வற்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், தாய் வீட்டிற்குச் செல்ல மறுத்த மனைவி தனலட்சுமியை வீட்டில் இருந்த கத்தியால் தலை, கால், காது, கை ஆகியப் பகுதியில் சரமாரியாக வெட்டியதாகத் தெரிகிறது. பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் இருந்த தனலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 அவசர ஆம்புலென்ஸ் மூலம் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
தகவல் அறிந்த செய்யாறு போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தனலட்சுமியிடம் வாக்குமூலம் பெற்று அதன் பேரில் வழக்கு பதிவு செய்து கணவர் தேசிங்கை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டனர்