

வாழப்பாடி: நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அனைத்து பகுதிகளிலும் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடிக் கிடக்கின்றன.
பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இணையவழியில், மாணவ- மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மாணவ-மாணவியர் இணைய வழிக்கல்வியை பெற முடியாத நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், முதல் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதனால், மாணவ- மாணவியரும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, கடந்த 2019-2020 கல்வியாண்டுக்கான இறுதி பருவத் தேர்வுகள் மற்றும் விடுபட்ட தேர்வுகளுக்கான அரியர் தேர்வுகள் நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி, அனைத்து தரப்பு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ- மாணவியர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் இடையே நீடித்து வந்தது.
இதற்கிடையே, இறுதியாண்டு இறுதி பருவத்தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளையும் ரத்து செய்து, அனைவரும் குறைந்தபட்ச மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றதாக தேர்வு முடிவுகள் வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், விடுபட்ட பாடங்களுக்கான அரியர் பாடங்களுக்கும் தேர்வு நடத்தாமல், ஏற்கனவே பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டுமென, நாடு முழுவதிலுமுள்ள மாணவ- மாணவியரிடையே கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து, தமிழகத்திலும் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை மாணவ-மாணவியருக்கும், 2019-2020 கல்வியாண்டிற்கான இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற அனைத்து பருவத்தேர்வுகளையும், விடுபட்ட பாடங்களுக்கான அரியர் தேர்வுகளையும் ரத்து செய்வதாகவும், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுமெனவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே, தமிழகத்தில், சேலம் பெரியார் பல்கலைக் கழகம், சென்னை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள், தொலைதூர கல்வி வழியில், இளநிலை முதல் மற்றும் இரண்டாமாண்டு, முதுநிலை முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள், உரிய தேர்வு கட்டணத்தை செலுத்தினால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் எனக்கூறி, தேர்வு கட்டணங்களை ஏற்கனவே, ஆன்லைனில் வசூலிக்கப்பட்டுவிட்டது.
தேர்வு கட்டணம் செலுத்திய மாணவ-மாணவியருக்கு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள், மூன்றாண்டு இளநிலை படிப்புகளுக்கு முதல் மற்றும் இரண்டாமாண்டு தேர்வுகளையும், இரண்டு ஆண்டுகால முதுநிலை படிப்புகளுக்கு முதலாண்டு தேர்வுகளையும் ரத்து செய்து, தேர்ச்சி பெற்றதாக தேர்வு முடிவுகளை இணையவழியில் வெளியிட்டுள்ளன.
சேலம் பெரியார் பல்கலைக் கழகம் தொலைதூர கல்வி நிறுவனத்தில் படித்து வரும் இளநிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களும், முதுநிலை முதலாமாண்டு மாணவர்களும் தேர்வு கட்டணங்களை வரும் செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் செலுத்தி, இணையவழியில் தேர்வுக்கு விண்ணப்பித்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுமென அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால், தொலைநிலைக் கல்வி பயிலும் பெரும்பாலான மாணவர்கள் தங்களது தேர்வுக் கட்டணங்களை இணையவழியில் செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை இறுதி பருவத்தேர்வை தவிர, நிலுவை பாடத்திற்காக அரியர் தேர்வுகள் உள்பட பருவ தேர்வுகளையும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிலையில், தொலைநிலை கல்வியில் இளநிலை மற்றும் முதுநிலை படித்து வரும் மாணவ மாணவியர்களுக்கும், தேர்வு கட்டணம் செலுத்தும் நிலுவை பாடங்களுக்கான அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொலைநிலை கல்வியில் படித்து வரும் மாணவ- மாணவியருக்கும் , நிலுவை பாடங்களுக்கான அரியர் தேர்வுகளுக்கு உரிய தேர்வு கட்டணத்தை செலுத்தினால், தேர்வுகள் ரத்து செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து தமிழக அரசும், பல்கலைக்கழகங்களும் தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் தொலைநிலை கல்வி பயிலும் மாணவ மாணவியர் இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.