இதுவரை பார்த்தறியாத தமிழக மக்களின் வாழ்வியல் மற்றும் கலாசாரம் பற்றி பேசக் கூடிய புத்தகமாக, எழுத்தாளர் க.அரவிந்த் குமாரின் படைப்பான 'தேசம்மா' என்னும் நூல் சென்னையில் வெளியிடப்பட்டது.
காலச்சுவடு பதிப்பித்துள்ள இந்தச் சிறுகதைத் தொகுப்பின் முதல் பிரதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி. குரூஸ், எழுத்தாளர் ஷாஜி ஆகியோர் வெளியிட, நக்கீரன் ஆசிரியர் கோபால், எழுத்தாளர் இரா.முருகவேள், எழுத்தாளர் என்.ஸ்ரீராம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் சிறப்புரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மக்கள் மொழியில் படைப்புகள் மேலெழுந்து வர வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய நக்கீரன் கோபால், எழுத்தாளர் அரவிந்த் குமாரின் முதல் நூலைத் தம்முடைய பதிப்பகம் வெளியிட்டதை நினைவுகூர்ந்து வாழ்த்துகளையும் தெரிவித்தார்.