

காரைக்கால்: காரைக்காலில் மாங்கனித் திருவிழாவையொட்டி பக்தர்களின்றி வியாழக்கிழமை அம்மையார் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரானவர் புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு, காரைக்காலில் தனிக் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி மாங்கனித் திருவிழா என்ற பெயரில் உத்ஸவம் நடத்தப்படும். திருக்கல்யாணம், பிச்சாண்டவர் வீதியுலா, அமுதுபடையல் முக்கிய நிகழ்வாகும். பிச்சாண்டவர் வீதியுலாவின்போது மாங்கனி இறைத்தல் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர்.
கரோனா பொது முடக்கத்தால், நிகழாண்டு மாங்கனித் திருவிழா கோவில் வளாகத்தினுள், பக்தர்களின்றி நடத்த புதுச்சேரி அரசு அனுமதித்தது.
இதன்படி முதல் நாளான புகன்கிழமை இரவு மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைப்பு கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது. 2-ஆம் நாளான வியாழக்கிழமை அம்மையாரின் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருக்கல்யாண மேடையில் காரைக்கால் அம்மையார் - பரமதத்தரை அருகருகே வீற்றிருக்கச் செய்து திருக்கல்யாண வைவபம் காலை 9 மணிக்குப் பின் தொடங்கியது.
திருக்கல்யாண நிகழ்ச்சியில், சிறப்பு ஹோமம் நடத்தி, திருமாங்கல்யத்துக்கு சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் மேற்கொண்டனர். தொடர்ந்து பரமதத்தர் சார்பில், சிவாச்சாரியார் அம்மையாருக்கு திருமாங்கல்யதாரணம் செய்தனர். சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
திருமாங்கல்யதாரணம் முடிந்து சுவாமிகள் இருக்கை மாறி அமரவைக்கப்பட்டது. தொடர்ந்து 16 வகையான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி, நலத்துறை அமைச்சர் எம்.கந்தசாமி, நலவழித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதாஆனந்தன், சந்திர பிரியங்கா, கே.ஏ.யு.அசனா, மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, நிர்வாக அதிகாரி (கோயில்கள்) எம்.ஆதர்ஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.