வனத்துறை விசாரணைக்கு சென்ற விவசாயி பலி: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வனத்துறை விசாரணைக்கு சென்று உயிரிழந்த விவசாயி முத்துவின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியை அறிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வனத்துறை விசாரணைக்கு சென்று உயிரிழந்த விவசாயி முத்துவின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியை அறிவித்தார்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்து(வயது 72). விவசாயியான இவர் தோட்டத்தில் காய்கறி பயிரிட்டுள்ளார்.

இவர் தோட்டத்தைச் சுற்றிலும் மின் வேலி அமைத்திருந்ததாக வந்த தகவலையடுத்து கடையம் வனத்துறையினர் புதன்கிழமை இரவு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அணைக்கரை முத்துவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்தார். 

தகவலறிந்த உறவினர்கள்  வனத்துறையினர் தாக்கியதில் அணைக்கரை முத்து இறந்ததாகக் கூறி வியாழக்கிழமை ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்  குற்றவியல் நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைத்ததையடுத்து குற்றவியல் நீதிபதி கார்த்திகேயன் விசாரணையில் ஈடுபட்டார். 

மேலும், சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நிவாரணமாக 50 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்று கூறி இன்று மூன்றாவது நாளாக உடலை வாங்க மறுத்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வனத்துறை விசாரணைக்கு சென்று பலியான விவசாயி முத்துவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்  அறிவித்துள்ளார். முத்துவின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com