

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் யுஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக அமைச்சர் அன்பழகன் வந்ததாகவும் ஸ்கேன் முடிவுகள் இயல்பாக இருப்பதாகவும் பின்னர் கரோனா தொற்றுக்கான சோதனை எடுத்ததைத் தொடர்ந்து, தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அலுவல்பூர்வ வட்டாரத் தகவல்களை யுஎன்ஐ மேற்கோள் காட்டியுள்ளது.
மிதமான அளவில்தான் அமைச்சர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் அமைச்சர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
ஏற்கெனவே, திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜே. அன்பழகன் கரோனா தொற்றால் உயிரிழக்க நேரிட்டது. அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான கே. பழனி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
எனினும் தமக்கு கரோனா தொற்று இல்லை என அமைச்சர் கே.பி. அன்பழகன் குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.