பொதுமுடக்க பாதிப்பு : வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு நிதியுதவி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மனு தொடர்பாக
பொதுமுடக்க பாதிப்பு : வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு நிதியுதவி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
Published on
Updated on
1 min read

சென்னை: கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மனு தொடர்பாக கருத்தை  தெரிவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம்  சார்பில் அதன் செயலாளர் ஜூட் மேத்யூ தாக்கல் செய்த மனுவில், கரோனா பொதுமுடக்கத்தால் வாடகை வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழக அரசின் சமூக நல வாரியத்தின் மூலம் முடி திருத்துவோர், நெசவாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி தங்களுக்கு வழங்கப்படவில்லை.எனவே வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு நிதியுதவியாக ரூ.15 ஆயிரம்  வழங்க வேண்டும். மேலும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான சாலை வரியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வாகனங்களுக்கானத் தகுதிச் சான்றை புதுப்பிக்க 6 மாத கால அவகாசம் வழங்கவேண்டும். மேலும் வாகன காப்பீட்டு கட்டணங்களைச் செலுத்த 6 மாதங்களுக்கு அவகாசம் வழங்கவேண்டும்.போக்குவரத்து வாகனங்களுக்கு பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை வட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டும். சுங்கச்சாவடி கட்டணம், மாநிலங்களுக்கு இடையிலான பயணத்துக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மனுதாரர் சங்கத்தின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கனிமொழிமதி பாதிக்கப்பட்ட வாடகை வாகன உரிமையாளர்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். 

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக  அரசின் கருத்துக்களை அறிந்து தெரிவிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com