திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் பல்வேறு பணிகள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தி வருகிறார்.
கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக மாவட்டந்தோறும் ஆலோசனை நடத்தி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம், கோவையை அடுத்து திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இதற்காக சேலத்திலிருந்து கார் மூலம் திருச்சிக்கு வருகை தந்த முதல்வரை மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி, முன்னாள் எம்.பி-க்கள் ப. குமார், டி. ரத்தினவேல், ஆவின் சேர்மன் சி. கார்த்திகேயன் உள்ளிட்டோர் மலர்கொத்து அளித்து வரவேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித்துறை, சட்டத்துறை, பதிவுத்துறை, வணிகவரித்துறை, மக்கள்நல்வாழ்வுத்துறை ஆகியவற்றுக்காக கட்டப்பட்டுள்ள ரூ.25.53 கோடி மதிப்பிலான கட்டடங்களை திறந்து வைத்தார். பின்னர், திருச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்புப் பணிகளை கேட்டறிந்த அவர், குடிமராமத்து பணிகள் மற்றும் பல்வேறு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். முக்கொம்பில் நடைபெறும் புதிய கதவணை கட்டும் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், மாநகரக் காவல்துறை மற்றும் மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் வெப்பமானி மூலம் பரிசதோனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.