நாகர்கோவில்: நாகர்கோவிலில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை பகுதியை சேர்ந்த 40 வயதான ஒருவர் மார்ச் 3 ஆம் தேதி குவைத் நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர், கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் புதன்கிழமை நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து மருத்துவர்கள் கூறியாதாவது: உயிரிழந்தவருக்கு ஏற்கெனவே கல்லீரல் மற்றும் மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர்தான் அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றனர்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்படட்டிருந்த 59 வயதுடைய பெண் ஒருவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.