கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் 10 பேர் தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 10 பேரும் குணமாகி வீடு திரும்பியுள்ளதை அடுத்து கும்மிடிப்பூண்டி கரோனா தொற்று இல்லாத வட்டமாக மாறியுள்ளது.
கும்மிடிப்பூண்டி வட்டத்தில் கும்மிடிப்பூண்டி நகரில் 6 பேர், ஆரம்பாக்கத்தில் 3 பேர், கவரப்பேட்டையில் 1 நபர் என ஏப்ரல்-3 -ஆம் தேதி தேதி முதல் ஏப்ரல்-13 -ஆம் தேதி வரை 10 பேருக்கு கரோனா தொற்று உள்ளதென வட்டார சுகாதார துறையினர் கண்டறிந்து அவர்களுக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர்.
மேலும் கரோனா தொற்று பரவாமல் இருக்க சுகாதாரத் துறையினர், வருவாய் துறையினர், காவல் துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர் ஒருங்கிணைந்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், கரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேரும் ஒருவர்பின் ஒருவராக குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட 10வது மற்றும் இறுதி நபரான கும்மிடிப்பூண்டி வட்டம் ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண்ணும் வெள்ளிக்கிழமை குணமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரும் வெள்ளிக்கிழமை இரவு அரசு அவசர ஊர்தி மூலம் ஆரம்பாக்கம் திரும்பினார். அப்போது ஆரம்பாக்கம் பஜாரில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், வட்டாட்சியர் ஏ.என்.குமார், வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், டிஎஸ்பி ரமேஷ், ஆய்வாளர் வெங்கடாச்சலம், ஊராட்சி தலைவர் தனசேகர் மற்றும் பொதுமக்கள் அவரை கைதட்டி வரவேற்றனர்.
தொடர்ந்து வட்டாட்சியர் குமார் அந்த பெண்ணிற்கு புத்தக பரிசளித்தார். காவல் துறை சுகாதார துறை சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 10 கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர் இருந்த கும்மிடிப்பூண்டியில் அனைவரும் குணமாகி வீடு திரும்பியுள்ளதை அடுத்து தற்போது கும்மிடிப்பூண்டி கரோனா தொற்று இல்லா பகுதியாக மாறியுள்ளது.