அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு உயர்வு: இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர், கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிக்கன நடவடிக்கை என்று சொல்லி அனைத்து அரசுத் துறைகளிலும் புதிய பதவிகளை உருவாக்கத் தடை விதித்து தமிழக அரசுப் பிறப்பித்துள்ள உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும்.
இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு 58-லிருந்து 59 ஆக உயர்த்திய அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும், கரோனா நோய் தொற்றைப் பரப்பும் அபாயம் உள்ள டாஸ்மார்க் மதுபானக் கடைகளை உடனே மூட வேண்டும்.
கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 10,000 நிவாரணமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் கீழ வீதியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலர் ஆர்.ஆர். முகில் தலைமையில் மாவட்டக் குழு உறுப்பினர் சி. சுதந்திரபாரதி, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்டச் செயலர் சி. செந்தூர்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஏஐடியூசி தொழிற் சங்க அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்பாட்டத்துக்கு மாநிலக்குழு உறுப்பினர் சு. துர்காதேவி தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மு. மணிகண்டன், டி.கே. கோபி, ஏ. லெனின், என். பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.