அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை மாலை சைக்கிளில் சென்ற சிறுவன் மீது குடிநீர் வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானார்.
அருப்புக்கோட்டை அருகே சுக்கில நத்தம் கிராம எல்லையில் உள்ள அம்பேத்கர் குடியிருப்பைச் சேர்ந்தவரான ராஜபாண்டி என்பவரது மகன் விஸ்வா(வயது 10). இதனிடையே, விஸ்வா வியாழக்கிழமை மாலை, தனது பெற்றோர் சொன்ன பொருட்களை வாங்க அருப்புக்கோட்டையிலுள்ள கடைவீதிக்குத் தனது சைக்கிளில் சென்றானாம்.
பின்னர் மீண்டும் வீடு திரும்புவதற்காக விஸ்வா சைக்கிளில் வந்துள்ளான். அவன், சுக்கிலநத்தம் எல்லையில் உள்ள ஒரு கோவிலருகே சாலையில் வந்தபோது பின்னால் வந்த குடிநீர் வாகனம் (டாடா ஏஸ்) ஒன்று விஸ்வாவின் சைக்கிள் மீது திடீரென மோதியதாம்.
இதில் சைக்கிளுடன் விஸ்வா வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான. தகவலறிந்து வந்த காவல்துறையினர் வாகனத்தின் அடியில் சிக்கியிருந்த சிறுவனின் உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர், குடிநீர் வாகனத்தின் ஓட்டுநரான சீனி என்பவரைக் கைது செய்ததுடன், விபத்து நடந்த விதம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.