பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு விரைவில் நீதி கிடைக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் என செவ்வாய்க்கிழமை மத்திய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்தார்.
கைரேகை பணியகத்தின் 21 வது அகில இந்திய இயக்குநர்கள் மாநாட்டை காணொளி மூலம் திறந்து வைத்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியதாவது,
பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு விரைவில் நீதி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதற்கு உறுதி அளிக்கிறேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், குற்றம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே எங்கள் நோக்கம். சாதி, மதம் அல்லது மாநிலங்களின் அடிப்படையில் குற்றங்களை மத்திய அரசு பிரித்து பார்ப்பதில்லை.
சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகள் மாநிலங்களைச் சார்ந்ததாக இருப்பினும், குற்றங்களை கண்காணிப்பதிலும், காவல்துறை நவீனமயமாக்குவதிலும் மத்திய அரசு தன் பங்கை செலுத்தி வருகிறது.
காவல் துறையை நவீனமயமாக்குவதற்காக 2019-20 ஆம் ஆண்டில் ரூ. 780 கோடி ஒதுக்கப்பட்டது. குற்றம் சமந்தமான பதிவுகள் மற்றும் கைரேகை தரவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதன் மூலம் குற்றவாளியை கண்காணிப்பது எளிதாகும். மேலும், முழுமையாக கணினிமயமாக்கப்பட்ட தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு விரைவில் செயல்படும் என கூறினார்.
இதையடுத்து, தேசிய குற்றப் பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி) அமைத்த அதிநவீன சைபர் தடயவியல் கருவிகளைக் கொண்ட ஒரு சைபர் ஆய்வகத்தையும் ரெட்டி திறந்து வைத்தார்.
அக்டோபர் மாதம் தேசிய சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.