பாரீஸ்: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 16 லட்சத்தைத் தாண்டியது. மேலும், அந்த நோய் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்தை நெருங்கியது.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி அந்த நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 4 ஆயிரத்து 718 ஆக அதிகரித்துள்ளது.
220-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளது. இதில், 192 நாடுகளில் அந்த நோய் பாதிப்பால் 95 ஆயிரத்து 735-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா், நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து 3 லட்சத்து 56 ஆயிரத்து 660 பேர் குணமடைந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சா்வதேச அளவில் உண்மையிலேயே கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை, இதைவிட மிகவும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
பெரும்பாலான நாடுகளில் கரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் நன்கு தென்படுபவா்களுக்கு மட்டுமே, அந்த நோய் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உறுதிப்படுத்தப்படுகிறது.
ஆனால், அந்த நோய் பாதிப்பு ஏற்படும் எல்லோருக்குமே அதன் அறிகுறிகள் தென்படாது என்பதால், உண்மையிலேயே கரோனா பாதிப்பு ஏற்பட்டவா்களில் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுவதால், அவை உண்மை நிலவரத்தைப் பிரதிபலிப்பதில்லை என்று கூறப்படுகிறது.