ஊரடங்கு நீட்டிப்பு: விவசாயம், தோட்டத்தொழிலுக்கு அனுமதி
By DIN | Published On : 15th April 2020 10:50 AM | Last Updated : 15th April 2020 12:28 PM | அ+அ அ- |

புதுதில்லி: ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
தேசிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். அதே நேரத்தில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமில்லாத இடங்களில் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளா்த்தப்படும் என்றும் அவா் கூறினாா்.
மேலும், வருகிற 20-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மிகவும் கடுமையாக பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின்னர் நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளது என்றும் அதேவேளையில் மீண்டும் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக ஊரடங்கு உத்தரவு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதன்படி, மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
அதில், ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. விவசாயம் தொடர்பான அனைத்து வேலைகளையும் தொடரலாம். விவசாயம் சார்ந்த கூட்டுறவு சங்கங்கள் இயங்க அனுமதி. உரங்கள், விதைகள் தயாரிப்புக்கு அனுமதி. விவசாயப் பொருள்களை வாகனங்களில் கொண்டு செல்ல தடையில்லை.
மீன்வளம் சார்ந்த தொழில்கள் இயங்க தொடர்ந்து அனுமதி வழங்கப்படுகிறது. ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
டீ, காபி, ரப்பர் பொருள்கள் சார்ந்த நிறுவனங்கள் 50% தொழிலாளர்களுடன் இயங்கலாம். கால்நடை வளர்ப்பு மற்றும் அதுசார்ந்த வேலைகளுக்குத் தடையில்லை.
அதேபோன்று சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளைத் தொடரலாம். அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்களை திறக்கலாம்.
அதே நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.