மங்களூரு: சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மங்களூரு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் உறவினர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முகநூலில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கலைக்க முயன்றதால், போராட்டம் கலவரமாக மாறியது.
இதனிடையே சுதந்திர தினத்தையொட்டி சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மங்களூரு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பேசிய காவல் ஆணையர் விகாஸ் குமார், சட்டம் - ஒழுங்கை கெடுக்கும் வகையில், சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிடுவோர் மட்டுமல்லாமல், அதனை பகிர்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை மீறும் வகையிலும், மதங்களை அவமதிக்கும் வகையிலும் கருத்துகளை பதிவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.