வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேச எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.
இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக சென்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக திரளான விவசாயிகள் தில்லி நோக்கி நகரத் தொடங்கினர். இதையடுத்து தில்லிக்குள் விவசாயிகள் நுழையாதபடி மாநில எல்லை மூடப்பட்டது.
இந்நிலையில் மீரட் - தில்லி தேசிய நெடுஞ்சாலை, தில்லி - காஜியாபாத் நெடுஞ்சாலை மற்றும் காசிப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 24 ஆகிய எல்லை பகுதியில் திரண்ட விவசாயிகள் தில்லிக்குள் நுழையாதபடி வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்தெறிந்தனர். இதனால் காவலர்களுக்கும், விவசாயிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.