தஞ்சாவூர்: மக்களுக்காகவே இந்த அரசு என்றும் இருக்கும் என்றார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
தஞ்சாவூரில் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர். வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
டெல்டா மாவட்டங்கள் தமிழ்நாட்டுக்கு உணவளிக்கும் பூமி. இங்கு ஹைட்ரோகார்பன் திட்டத்தால் இப்பகுதி மக்கள் அச்சத்துக்கு ஆளாகி இருந்தனர். இதற்கு முடிவு கட்டவே, இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றும், இன்றும், என்றும் மக்களுக்கும் விவசாயிகளுக்குமான அரசு இது. மக்களோடுதான் இருப்போம். மக்களுக்காகவே இந்த அரசு என்றும் இருக்கும் என்றார் பன்னீர்செல்வம்.
வாசன் பேச்சு: முன்னதாக தமாக தலைவர் ஜிகே வாசன் பேசியதாவது: டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காகத் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை முதல்வரும் துணை முதல்வரும் உறுதிசெய்துள்ளனர். ஒட்டுமொத்த டெல்டாவின் எண்ணத்தை இந்த ஆட்சி பிரதிபலித்துள்ளது.
தமிழ்நாட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை இந்த ஆட்சி 100 சதவீதம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட வேண்டும். இந்த ஆட்சிக்கும் கூட்டணிக்கும் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று வாசன் கூறினார்.