சென்னை: பொதுமுடக்க காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 நீதிபதிகள், அவசர வழக்குகளை மட்டும் விசாரித்து வந்த நிலையில், வரும் ஜூலை 6 -ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும், காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து, அனைத்து நீதிபதிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் ஜூலை 6 -ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும், புதிய மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளையும் விசாரிப்பது எனவும், காணொலி காட்சி மூலம் மட்டுமே வழக்குகளை விசாரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இரு நீதிபதிகள் அடங்கிய 6 அமர்வுகளும், 27 தனி நீதிபதிகளும், வரும் ஜூலை 6-ஆம் தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.
மேலும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், இரண்டு இரு நீதிபதிகள் அமர்வுகளும், 9 தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.
கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் மூடப்பட்டு, அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.