வேதாரண்யம்: பாஜகவில் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவரும், வேதாரண்யம் தொகுதியின் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான எஸ்.கே. வேதரத்தினம் மீண்டும் திமுகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து 4 முறை திமுகவின் ஒன்றியச் செயலாளராக இருந்தவர். திமுக சார்பில் 1996, 2001, 2006 ஆகிய பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர்.
நான்காவது முறையாக 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு 2-வது இடம் வகித்து வெற்றி வாய்ப்பை இழந்தார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், 2016 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2016 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்த தேர்தலில் வேதரத்தினம் சொந்த ஊரான தேத்தாக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரத்தில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தொடர்ந்து வேதரத்தினத்துக்கு பாஜகவில் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த நிலையில், எஸ்.கே.வேதரத்தினம் மீண்டும் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதன்கிழமை மாலை 4 மணியளவில் வேதாரண்யம் நகர திமுக அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி முறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைகிறார்.