ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் இந்தியர்கள் கடந்த 2019-2020 ஆண்டில் மட்டும் 38,000 பேர் குடியுரிமைப் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 60 சதவிதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் 2,00,000 பேர் குடியுரிமைப் பெற்றுள்ளனர். அதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 38,000 பேர் ஆகும். மற்ற நாட்டினரைக் காட்டிலும் இந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிகளவில் குடியுரிமைப் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அமைச்சர் ஆலன் டட்ஜ் கூறுகையில், “சமூகத்தில் ஒருங்கிணைந்த, பன்முக கலாச்சார நாடாக மாற முக்கியமான ஒன்று மற்ற நாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதாகும். அதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
ஒருவர் ஆஸ்திரேலிய குடிமகனாக மாறுவது என்பது இங்கு வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும் மேலானது. ஆஸ்திரேலியாவின் உரிமைகள், சுதந்திரங்கள், சட்டங்கள் மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்த அவர்கள் உறுதிமொழி ஏற்கிறார்கள். இது எங்கள் நாட்டின் பன்முக கலாச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாகும்" என்று டட்ஜ் கூறினார்.