தேனி மாவட்டம் அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் கம்பம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகன் தினேஷ்குமார்(20). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் மணிகண்டன், இவரும் கூலித்தொழிலாளி. இருவரும் சனிக்கிழமை இரவு ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் ரூ.200 கொடுக்கல் வாங்கல் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அரிவாளால் தினேஷ்குமாரின் வலது பின்னங்காலை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தினேஷ்குமார் கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் கலைமணி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடி வருகிறார்.