காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசர் கண்ணதாசனின் 94 -வது பிறந்த நாள் விழா அவரது நினைவு மண்டபத்தில் புதன்கிழமை காலையில் நடைபெற்றது.
தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவரும், புகழ் பெற்ற திரைப்பட பாடலாசிரியருமான கவியரசர் கண்ணதாசனுக்கு ஜூன் 24-ஆதேதி பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்துவது வழக்கம். காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகே கவியரசர் கண்ணதாசன் நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டு அதில் அவரது மார்பளவு சிலையும் நிறுவப்பட்டுள்ளன. புதன்கிழமை காலையில் மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் கண்ணதாசன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து தேவகோட்டை கோட்டாட்ச்சியர் சுரேந்திரன், காரைக்குடி வட்டாச்சியர் பாலாஜி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரெங்கராஜ், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி அலுவலர் கருப்பணராஜவேல், கவியரசர் கண்ணதாசன் மகள் விசாலாட்சி கண்ணதாசன், பழனியப்பன், கவிஞர் அரு. நாகப்பன், மருத்துவர் ஆர்.வி.எஸ். சுரேந்திரன் ஆகியோரும் கண்ணதாசன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.