தஞ்சாவூர் அருகே வியாழக்கிழமை பிற்பகல் காரில் சென்றவர் வழி மறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் விளார் சாலை காயிதேமில்லத் நகரைச் சேர்ந்தவர் ஏ. யூசுப் (45). இவர் வல்லம் மேம்பாலப் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத சிலர் இவரை வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த யூசுப் நிகழ்விடத்திலேயே பலியானார். இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதில், யூசுப் குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்ததும், அப்போது இலங்கையைச் சேர்ந்த அசிலா என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்ததும் தெரியவந்தது. மேலும், இருவரும் காயிதே மில்லத் நகரில் வாழ்ந்து வந்தபோது தகராறு ஏற்பட்டு, தஞ்சாவூர் காவல் நிலைத்தில் அசிலாவால் புகார் செய்யப்பட்டுள்ளதும், இருவருக்கும் இரு ஆண்டுகளாகச் சொத்து பிரச்னை இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
எனவே இதன் காரணமாக யூசுப் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அசிலா உள்ளிட்டோரை வல்லம் காவல் நிலையத்தினர் தேடி வருகின்றனர்.