ஆன்லைன் வகுப்பு: விதிமுறைகள் வகுப்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் வகுப்புக்கள் நடத்துவதை முறைப்படுத்துவது தொடர்பான விதிகள் வகுப்பது குறித்து ஜூலை 6 -ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க, மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்பு: விதிமுறைகள் வகுப்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் வகுப்புக்கள் நடத்துவதை முறைப்படுத்துவது தொடர்பான விதிகள் வகுப்பது குறித்து ஜூலை 6 -ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க, மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணையதளங்களால் அவர்களுக்குக் கவனம் சிதறல் ஏற்படுகிறது.

எனவே அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்க வேண்டும். அதுவரை ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் 8 சதவீத  வீடுகளில் மட்டுமே இணையதள இணைப்புடன் கூடிய கணினி வசதி உள்ளது. ஆன்லைன் முறையில் பாடம் நடத்துவதால் நகர்புற, கிராமப்புற மற்றும் ஏழை பணக்கார மாணவர்களுக்கு இடையே சமநிலையற்ற நிலை உருவாகியுள்ளது. 
மேலும் முறையான ஆன்லைன் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் சவால்களையும், இடையூறுகளையும் சந்திக்கின்றனர். எனவே மாணவ மாணவிகள் ஆபாச இணையதளங்களை  பார்ப்பதைத் தடுக்கும் வகையில், சட்ட விதிகளின்படி, முறையான விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். 

இதேபோன்று விமல் மோகன் என்பவர்  1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும். மேலும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு நாளுக்கு 2 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என்ற விதிகளை உருவாக்க வேண்டும். 

மேலும் செல்லிடப்பேசி, மடிக்கணினி, கணினியை மாணவர்கள் பார்ப்பதால் அதில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சால் மாணவர்களின் விழித்திரை பாதிக்கப்படுமா என்பது குறித்து கண்சிகிச்சை நிபுணர்களின் அறிக்கை பெற வேண்டும் என கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மத்திய அரசுத்தரப்பில், ஆன் லைன் வகுப்புக்களை முறைப்படுத்துவதற்கான விதிகள் வகுப்பது தொடர்பாக உள்துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கருத்துக்களைப் பெற்று தெரிவிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. 

அப்போது தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மாணவர்களின் கண் பாதிப்பு குறித்து அரசு கண் மருத்துவமனை தலைவர்  அறிக்கை அளிக்க ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை கோரிய அனைத்து வழக்குகளையும் வரும் ஜூலை 6- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் விதிகள் வகுப்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com