சென்னையில் இருந்து விமானத்தில் சேலம் வந்த ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஐந்து பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து சேலத்திற்கு நாள்தோறும் பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் சராசரியாக 50க்கும் மேற்பட்ட பயணிகள் சேலம் வருகின்றனர். சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் விமானம் வாயிலாக சேலம் வருகின்றனர்.
சென்னையிலிருந்து விமானம் மூம் சேலம் வரும் அனைவருக்கும் விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் வரும் வரை ஒரு நாள் தனிமை மையத்தில் வைக்கப்படுகின்றனர்.
கடந்த மே 27-ஆம் தேதி தொடங்கி பயணிகள் விமான சேவை நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் இருந்து சேலம் வந்த பயணிகளில் இதுவரை 17 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை சென்னையில் இருந்து சேலம் வந்த பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தியதில் ஒரு பெண் உள்பட ஐந்து பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய 53 வயது பெண், அவருடைய 45, 49 வயது தம்பிகள், சேலத்தை சேர்ந்த 27 வயது இளைஞர், நாமக்கல்லைச் சேர்ந்த 28 வயது இளைஞர், கள்ளக்குறிச்சியை சேர்ந்த 28 வயது இளைஞர் ஆகிய 5 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து சேலத்திற்கு சராசரியாக 50க்கும் மேற்பட்டோர் விமானம் வாயிலாக நாள்தோறும் வந்து செல்கின்றனர். கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் விமான பயணத்திற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.