ராமநாதபுரம்: ராமநாதபுரம் உச்சிப்புளியில் உள்ள ஐஎன்எஸ் பருந்து விமானப்படை தளத்தில் 29 வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப்படை தளம் மூடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் உச்சிப்புளியில் கடற்படைக்குச் சொந்தமான சிறிய விமானப்படைத்தளம் (பருந்து) உள்ளது. இங்கு பணிபுரியும் கடற்படை விமான பிரிவு வீரர்கள் உள்ளிட்டோருக்கு புதன்கிழமை கபம் மாதிரி எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில் கடற்படை விமான பிரிவு வீரர்கள் 29 பேருக்கும் மற்றும் 35 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதாரப் பிரிவினர் கூறினர்.
இதையடுத்து விமானப்படை தளத்தில் கிருமிநாசினி வியாழக்கிழமை தெளிக்கப்பட்டது. கரோனா பாதிப்புக்குள்ளானோரை சிகிச்சைக்கு சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப்படை தளம் மூடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை ஒரே நாளில் 57 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 157 பேருக்கு புதன்கிழமை கரோனா சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மாலையில் 17 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால், புதன்கிழமை மாலை முதல் இரவு வரையில் ஏராளமானோர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதால் படுக்கைகள் பற்றாக்குறை நிலையும் ஏற்பட்டது.