சேலம் மாவட்டம் மேட்டூரில் நோய்வாய்ப்பட்ட ஏழு வயது ஆண் யானைக்கு மருத்துவர்கள் சிகிச்சை
சேலம் மாவட்டம் மேட்டூரில் நோய்வாய்ப்பட்ட ஏழு வயது ஆண் யானைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேட்டூரை அடுத்த கொளத்தூரில் உள்ளது தமிழக கர்நாடக எல்லை வனப்பகுதி. அடர்ந்து காணப்படும் இந்த வனப்பகுதியில் யானைகளும் மான்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி கிராமங்களில் நுழையும். வனப்பகுதியில் யானைகளுக்கு தேவையான குடிநீர் உணவு உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சேலம் மாவட்ட வன எல்லையும் ஈரோடு மாவட்டம் வான எல்லையும் இணையும் இடமும் உள்ளதால் இரு மாவட்ட வனத்துறையினரும் வன விலங்குகளை பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை.
கடந்த வாரத்தில் மேட்டூர் வனச்சரகத்தை ஒட்டிய ஈரோடு மாவட்ட வன எல்லையில் காயத்துடன் யானை ஒன்று இறந்து கிடந்தது. அதன் பிறகு யானைகள் கூட்டம் ஒன்று கிராமங்களில் நுழைந்தது. அதனை வனத்துறையினரும் கிராம மக்களும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
வெள்ளிக்கிழமை சுமார் 7 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று பெரியதண்டா வனப்பகுதியில் உள்ள பச்சபாளி ஓடை அருகே நோய்வாய்ப்பட்டு விழுந்துகிடந்தது. தகவலறிந்த மேட்டூர் வனச்சரகர் பிரகாஷ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கால்நடை மருத்துவர் ரங்கநாதன் மூலம் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த யானை வடபர்கூர் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்து மூன்று நாள்களாக குடல்புண் நோயால் அவதிப்பட்டு இந்தப் பகுதியில் உடல் மெலிந்து இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.