ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் மாயமானார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை 600 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், ஞாயிற்று கிழமை காலையில் விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில் இரவு வரை செல்வக்குமார் என்பவரது படகு மட்டும் கரை திரும்ப வில்லை.
மேலும் படகில் இருந்த மீனவர்கள் செல்வக்குமார், அண்ணாத்துரை, சினி, பக்கீர் ஆகிய மீனவர்கள் படகுடன் மாயமாகி விட்டனர். சக மீனவர்கள் தேடிச்சென்றும் கண்டு பிடிக்க முடியாத நிலையில் கரை திரும்பி உள்ளனர். இது குறித்து மீனவ சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மீன்வளத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் காலதாமதம் செய்யாமல் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் ஹொவர்கிராப்ட் கப்பல்கள் மூலம் தேடும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 13 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களை மீட்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் உடல் மட்டும் மீட்கப்பட்டது.
இதனால் தற்போது மாயமாகி உள்ள விசைப்படகு மற்றும் மீனவர்களை மீட்க விரைவாக செயல்பட வேண்டும்.