புதுதில்லி: இத்தாலியில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இத்தாலி தலைநகர் ரோம் மற்றும் மிலனுக்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, அனைத்து சுற்றுலா நுழைவு இசைவுகளையும் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடா்பாக புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘அனைத்து சுற்றுலா நுழைவு இசைவுகளும் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன. இதில் அலுவல், வேலைவாய்ப்பு, ஐ.நா மற்றும் சா்வதேச அமைப்புகள், தூதரக ரீதியிலான நுழைவு இசைவுகளுக்கு விலக்களிக்கப்படுகிறது. வரும் 13-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இத்தாலியில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இத்தாலி தலைநகர் ரோம் மற்றும் மிலனுக்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 15 முதல் 25 ஆம் தேதி வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.